search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு"

    கர்நாடக சட்டமன்றத்தில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மை கிடைக்காததால் வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா பதவி விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BJP #Yeddyurappa #KarnatakaFloorTest
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்றுவருகிறது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மற்ற எம்எல்ஏக்கள் 3.30 மணிக்கு பதவியேற்பார்கள்.

    இதற்கிடையே, பா.ஜ.க.வின் இறுதிக்கட்ட குதிரை பேரம் குறித்து சர்ச்சை கிளப்பிய காங்கிரஸ், எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஆடியோவை வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலை தொடர்பு கொள்ளும் எடியூரப்பா, அவரிடம் அமைச்சர் பதவி தருவதாக பேசுகிறார்.

    காங்கிரசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்க வரவில்லை. அவர்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர்  தனது பிடியில் வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இதுபோன்ற சூழ்நிலையில் வாக்கெடுப்பின்போது அணிமாறி வாக்களிப்பார்களா? என்ற சந்தேகம் பா.ஜ.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்தால் உடனே ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். உறுப்பினர்கள் அனைவரும் பேரவை வளாகத்திற்குள்ளேயே மதிய உணவை சாப்பிட்டனர். மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும் சாப்பிட வெளியே செல்லவில்லை.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை வழங்குவதறக்க, சட்டமன்றத்தில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான வேணுகோபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இந்த பிரச்சனை ஒருபுறமிருக்க, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ரமேசுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தேஷ்பாண்டே திடீரென சந்தித்தார். இது பேரவை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #BJP #Yeddyurappa #KarnatakaFloorTest
    கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கி புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வரும் நிலையில், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை. KarnatakaFloorTest #CongressMLAs #BJP
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சியமைத்ததால், மெஜாரிட்டியை நிரூபிக்க இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. காலையில் அவை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க வரவில்லை. அவர்களின் பெயர்களை சபாநாயகர் வாசித்தபோது இருக்கையில் இல்லை. பின்னர் பிரதாப் கவுடா தாமதமாக வந்து பதவியேற்றார்.  இதே போல் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டியின் பெயரை சபாநாயகர் வாசித்த போது அவர் அவையில் இல்லை.

    எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரும்போது, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வராமல் இருந்தாலோ, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அணி மாறி வாக்களித்தாலோ, அவையின் பலம் குறைந்து, எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடும்.

    எனவே, இன்று மாலை 4 மணிக்குள் மேலும் சில எம்.எல்.ஏ.க்களை வாக்கெடுப்பில் பங்கேற்க செய்யாமல், குறுக்கு வழியை பா.ஜ.க. நாடலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை குறி வைத்து பா.ஜ.க. தனது இறுதிக்கட்ட பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaFloorTest #CongressMLAs
    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை முன்னிட்டு கர்நாடகா சட்டசபையான விதான் சவுதா வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Karnataka #KarnatakaFloorTest #KarnatakaAssembly
    பெங்களூர்:

    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை முன்னிட்டு கர்நாடகா சட்டசபையான விதான் சவுதாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அம்மாநில டி.ஜி.பி.க்கு சுப்ரீம்கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி. நீல்மணி என்.ராஜு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் சென்று விதான் சவுதா பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். அவர் உத்தரவின் பேரில் விதான் சவுதா வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று வளைய பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஓட்டெடுப்பு நடக்கும் சமயத்தில் ஏதேனும் இடையூறு, பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்க பெங்களூர் மேற்கு பகுதி கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பி.கே.சிங் தலைமையில் தனிப்படை தயாராக உள்ளது. அந்த படையில் 5 துணை போலீஸ் கமி‌ஷனர்கள், 20 உதவிக் கமி‌ஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். ஓட்டெடுப்பு காரணமாக இன்று பொதுமக்கள் யாரும் விதான் சவுதாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதற்கிடையே விதான் சவுதா பகுதியில் கட்சிக்காரர்கள் அத்துமீறி ஊர்வலம், போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதில் போலீசார் உஷாராக உள்ளனர். அவற்றை தடுப்பதற்காக சட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவை பெங்களூர் போலீஸ் கமி‌ஷனர் சுனீல்குமார் பிறப்பித்துள்ளார். #Karnataka #KarnatakaFloorTest #KarnatakaAssembly
    ×